குறிசொல்லும் கோவிலுக்கு சென்ற குடும்பஸ்தர் மரணம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவிலுக்கு சென்ற குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெசிந்தன் (வயது – 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமுற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது உடல்நிலையை சரி செய்வதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார்.

குறித்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார். அதன்பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டு நோயாளர் காவு வண்டி திரும்பிச் சென்றது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.