-நுவரெலியா நிருபர்-
காலி மீட்டியாகொட பகுதியில், கடந்த திங்கட்கிழமை மதியம் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், லிந்துலை அக்கரப்பத்னை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, இன்று புதன்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய போது, அவரை காலி மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் திருமதி லங்காகனி பிரபுத்திகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபரான குறித்த இளைஞர், லிந்துலை அக்கரப்பத்னை ஹோல்புறுக் பகுதியில் மனைவியின் வீட்டில் தலைமறைவாக இருப்பதாக தலவாக்கலை சிறப்பு விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, 31 வயதுடைய இளைஞனை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.
குற்றச் செயலுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், அக்கரபத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணையின் பின்னர் அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர்.
