உணவுக்காக நிறுத்தப்பட்ட பேருந்தை பயணிகளுடன் ஓட்டிச்சென்ற மதுபோதையில் வந்த நபர்!

கொழும்பு – திருகோணமலை தனியார் பேருந்து பயணிகள் உணவு உண்பதற்காக இடையில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பேருந்தை ஓட்டிச்சென்ற சம்பவம் கலேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மற்றும் திருகோணமலை மூதூருக்கு இடையில் இயங்கும் குறித்த தனியார் பயணிகள் பேருந்து, மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​நேற்று இரவு 12:00 மணியளவில் கலேவெல பகுதியில் ஒரு ஹோட்டலுக்கு அருகில் உணவுக்காக நிறுத்தப்பட்டது.

பேருந்தின் சாரதி, நடத்துனர் உட்பட சிலர் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்

அப்போது, ​​இப்பன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மதுபோதையில் வந்து சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் சாரதியும் நடத்துனரும் உணவருந்த ஹோட்டலிற்குள் சென்று விட, மதுபோதையில் இருந்த குறித்த நபர் ஹோட்டலை விட்டு வெளியேறி, பேருந்தில் ஏறி  அங்கிருந்த சாவியை பயன்படுத்தி பேருந்தை இயக்கி, பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைக் கண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.

மதுபோதையில் இருந்த குறித்த நபர் இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்