இரண்டு வாகனங்கள் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

 

யாழ்.கரவெட்டி நெல்லியடி நாவலர் மடம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த  கன்ரர் ரக வாகனமும், நெல்லியடி பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனமும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த வர்த்தக நோக்கிற்காக வந்த கன்ரர் ரக வாகனம் முன்னால் திடீரென திரும்பிய கார் ஒன்றை காப்பாற்ற முற்பட்டு, தனது பக்கத்திலிருந்து எதிர் பக்கம் நோக்கி திருப்பிய வேளை பருத்தித்துறை பக்கமிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனத்தை மோதியதில், ஹயஸ் ரக வாகனத்தில் வந்த மூவரும் கன்ரர் வாகனத்தை செலுத்தி வந்த சாரதியும் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த இலங்கையர்களான அஸ்ரிபன் அடினா, அஸ்ரிபன் சாரங்கா அன்ரனி ஜொக்சன் பெர்னாண்டோ ஆகியோரும், அம்பிகைபாலன் செந்தூரன் எனும் கன்ரர் வாகன சாரதியுமே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.