
இந்தியாவில் தங்கம் கடத்திய இலங்கையர்கள் கைது
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில் கைதாகியுள்ளனர்.
அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த இருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு தங்க நகைகளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , சில காலங்களுக்கு பிணையில் முன்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிணையில் வெளியே வந்தவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற வேளை இராமேஸ்வரம் பகுதியில் வைத்து க்யூ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
