அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை

நாட்டில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் காலி,மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வடக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.