
நானுஓயா விபத்து : மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்
நானுஓயாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 7 பேரில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, நானுஓயாவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பஸ், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியுடன் வேனில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் கல்விச் சுற்றுலா சென்ற கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த வேனில் பயணித்தவர்களில் 08 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 13 வயது சிறுவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 முதல் 27 வயதுக்கு இடைப்பட்ட மூன்று நபர்களும், 43 வயதுடைய பெண் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வேனில் இருந்து உயிரிழந்தவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்கள்.