
884 பில்லியன் ரூபாயைக் கடனாக வைத்துவிட்டுச் சென்றவர்கள் நிவாரணம் பற்றிப் பேசுகிறார்கள் – வலுசக்தி அமைச்சர்
உலகச் சந்தையில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டு மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் பாரிய நட்டத்தைத் தாங்கிக்கொண்டு நிவாரணம் வழங்கி வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாத எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் அரசாங்கமே நட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் உலகச் சந்தை விலை உயர்விலிருந்து சாமானிய மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நிவாரணம் எப்போது வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினருக்குப் பதிலளித்த அமைச்சர், “884 பில்லியன் ரூபாயைக் கடனாக வைத்துவிட்டுச் சென்றவர்கள்தான் இன்று நிவாரணம் பற்றிப் பேசுகிறார்கள்” எனச் சாடினார்.
மேலும், அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவத்தினால் மட்டுமே தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சில தனியார் நிறுவனங்கள், ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 200 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தக் கோரின. இருப்பினும், அரசாங்கம் 57 வீதமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளதால், மக்களின் நலன் கருதி அந்த விலை உயர்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
