
விண்வெளியில் இருந்து பூமிக்கு பயணத்தைத் தொடங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் இன்று புதன்கிழமை அதிகாலையில் தரையிறங்கவுள்ளார். இவரின் வருகையை உலகமே எதிர்பார்த்துக் கொண்டுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்வெளிக்கு 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவர்களை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றது.
இலங்கை , இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட்டது.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை 2:41 மணிக்கு டிராகன் காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகமாக நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் அதிகாலை 3:27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் தரையிறங்குவர் எனவும் நாசா அறிவித்துள்ளது.