வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே எனது நோக்கம்!

மன்னார் நிருபர்-
நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன்.எமது கடல் வளங்கள் கொள்ளையிட படுகின்றதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க உள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்ட அவர்  மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்திற்குச்   சென்று  கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது.
மேலும்  முக்கியமாக  நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன்.மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சனையை தீர்த்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுகின்றதை தடுக்கும் வகையில் நிறந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.வடக்கு மக்களின் அரசியல் உரிமை,சமூக உரிமை,பொருளாதார உரிமை,மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.
இன,மத வேறுபாடு களுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு,இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.இந்த நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் உள்ளது.அதற்கு நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் போன்று தீர்வை பெற்றுக் கொள்வது அவசியம்.
மன்னார் மாவட்டம் இன்றி வடக்கு ,கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அவர்களுக்கான சிறந்த திட்டங்கள் இலங்கை முழுவதும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டங்களை கொண்டு வர இருக்கிறேன்.
நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன்.
மீனவர்களின் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ள தோடு அதை வடக்கு கிழக்கை மையப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன்.
மாகாணசபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
மறைந்த எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாச அவர்கள் மாகாண சபையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
அதே போன்று மாகாண சபை  கட்டமைப்பை பாதுகாக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளுவேன், என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்