
போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான 61 வயதுடைய சட்டத்தரணியே, இவ்வாறு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரம் தயாரித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தப் பிரதிவாதியான சட்டத்தரணிக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்கு முறைப்பாட்டாளர் தரப்பு வெற்றிபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 6 வருடங்கள் வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பன்னிரண்டு வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தப் பன்னிரண்டு வருட சிறைத்தண்டனையை ஏககாலத்தில் 6 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
