
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடன் அட்டைகளில் தங்கம் கடத்தல் முறியடிப்பு : 30 வயது பெண் கைது
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 11 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் கம்பஹாவை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் துபாயிலிருந்து சென்னை ஊடாக இன்று அதிகாலை 1.45 மணிக்கு இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என விமானநிலைய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வந்திறங்கிய குறித்த பெண்ணின் பயணப்பையை சோதனையிட்ட போது, அதில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கரட் தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் கை வளையல்கள், கடன் அட்டைகள் வடிவிலான 24 கரட்டிலான 27 தங்கத் தகடுகள் , 08 தங்க வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணிடமிருந்து 04 கிலோ 892 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 111 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட 2222 கிராம் தங்கப் பொடிகளான திரவமும் மீட்கப்பட்டுள்ள நிலையில் இவற்றின் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.