
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை, வேன் ஒன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், என கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திகா லலித் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த ஒருவரைச் சந்தித்துவிட்டு, தவலந்தன்ன பகுதியில் இருந்து கொத்மலை பகுதியை நோக்கி திரும்பி கொண்டிருந்த போதே, வீதியைவிட்டு விலகி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த ஐந்து பேரையும், கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் கொத்மலை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
