மலையக தமிழர்களை அவதூறாக பேசியதாக தெரிவித்து அர்ச்சுனா எம்.பி க்கு எதிராக முறைப்பாடு!

-மஸ்கெலியா நிருபர்-

மலையக தமிழர்களை அவதூறாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர், இன்று செவ்வாய்க்கிழமை, பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது ICCPR சட்டம் (2007, இல. 56) கீழ் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில், அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட பொதுக் கருத்துக்கள், மலையகத் தமிழர் சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையிலும், பிரதேசவாதத்தை தூண்டும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும், வெறுப்புப் பேச்சாக அமைந்துள்ளதாக முறைப்பாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை ஜீவரத்தினம் சுரேஷ் (iPEN), அந்தனி ஜெசுதாசன் (VOPP), செல்வராஜா ராஜசேகர் (மாற்றம்), அழகர் செல்வராஜா (சுய சக்தி நிறுவனம்), மற்றும் கே.யோகா சுஜி போன்ற சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ளனர்.