
கோறளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான ”கோப் றெஸ்ட்” கட்டிடத் தொகுதியானது சங்கத்தின் நன்மைகருதி மீள்புனரத்தானம் செய்து நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருமானத்தினை மேம்படுத்தும் முகமாக, 2013 ஆம் ஆண்டளவில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதிஒதுக்கீட்டின் கீழ் உருவாக்கப்பட்ட ”கோப் றெஸ்ட்” கட்டிடத் தொகுதியானது ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்திலேயே தனியாரிடம் குத்தகை வருமானத்திற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த 2018 ஆம் ஆண்டளவில் சங்கத்தின் வருமானமட்டத்தினை அதிகரிக்கும் முகமாக அக்கட்டிட தொகுதியினை சங்கமே மீள பொறுப்பேற்றிருந்தது.
ஆனபோதிலும் அதில் பல குறைபாடுகளும் திருத்த வேலைகளும் காணப்பட்டதனால் மீள்புனரத்தானம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இக்கட்டிட தொகுதியானது தங்குமிடவசதிகளுடன் கூடியதாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அமையப்பெற்றுள்ளது.
இதன்மூலம், குறித்த கட்டிடத்தினை பயன்படுத்தி கூட்டுறவுச் சங்கமானது நேரடியாக தனது வருமானத்தினை உழைக்க முடிவதுடன் அதில் காணப்படுகின்ற ஒரு சில குறைபாடுகளையும் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
குறித்து நிகழ்வுகளின்போது, கூட்டுறவுச் சங்கங்களுக்கான கிழக்கு மாகாண ஆணையாளர் சிவலிங்கம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருச்செல்வம் கூட்டுறவு சங்கங்களுக்கான மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் தங்கவேல் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.