திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து : 6 வயது சிறுமி உயிரிழப்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வட்டவன் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில்  சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிதர்சன் ஆதித்யா (வயது 06) எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மேலும் அச்சிறுமியின் சகோதரனான நிதர்சன் அதிரேஸ் (வயது 04) எனும் சிறுவன் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள வட்டவன் பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் -பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன்,மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையில் குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும் கணவன் மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்