வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புதுக்குடியிருப்பு வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடிப்பூர தினமான இன்று பாசிக்குடா கடலில் பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் இனிது நிறைவு பெற்றது.

கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவப் பெரு விழா ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்களும் கிரியை நிகழ்வுகளும் உற்சவ நிகழ்வுகளும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை சப்பறத்திருவிழாவும் நடைபெற்றது.

இன்று அம்பாளுக்கு விசேட பூசை இடம்பெற்று அம்பாள் உள் வீதி வலம் வந்து பக்தர்கள் புடை சூழ ஆலய முன்றலில் உள்ள தீ மிதிப்பு இடத்திற்கு சென்று, தீ மிதிக்கும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கிய பின்னர், வாழைச்சேனை கல்குடா வீதி வழியாக ஆலயங்களை தரிசித்து ஊர்வலமாக சென்று பாசிக்குடா கடலில் வழக்கம் போல் தீர்த்தம் ஆடப்பட்டது.

திருவிழாக்கள் யாவும் ஆலயத்தலைவர் பரராஜசேகரம் தலைமையில், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வீ.தயாபரக் குருக்களின் பங்குபற்றுதலுடன் பிரமோற்சவ பிரதம குரு கிரியாஜோதி தேசமான்ய சிவஸ்ரீ வெங்கடசுந்தரராம குருக்கள் நடாத்தி வைத்தார்.