Last updated on April 28th, 2023 at 04:47 pm

09 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கத்துடன் 03 சந்தேக நபர்கள் கைது | Minnal 24 News %

09 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கத்துடன் 03 சந்தேக நபர்கள் கைது

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு (வலம்புரி) கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை-தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இரவு கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, பேசாலை கடற்கரையில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை பரிசோதித்தனர்.

இதன் போது குறித்த படகில் இருந்து 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரிச் சங்கு ஆகியவற்றை கடற்படையினர் மீட்டனர்.

குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட 03 சந்தேக நபர்களையும், அந்த பொருட்களை கடத்த பயன்படுத்திய டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இதற்கிடையில் இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.09 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள், தங்கம், சங்கு மற்றும் படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172