ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் சந்திப்பு

-வாழைச்சேனை நிருபர்-

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர்  சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைச்சு அலுவலகத்தில் நடந்த இச்சந்திப்பில், இம்முறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கான வழிவகைகளை செய்வது பற்றியும், இதிலுள்ள தடங்கல்களை களைவது குறித்தும் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹஜ்ஜுக்கு இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை. இந்நிலையில், இம்முறை 1585 பேருக்கு ஹஜ்கடமையை நிறைவேற்ற வாய்ப்புக் கிடைத்துள்ளது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களால், பயண ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களுக்கு தீர்வுகாண்பது பற்றியே அமைச்சருடன் கலந்துரையாடப்பபட்டது.

பயண கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டியுள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுதல் உள்ளிட்டவற்றை அரசின் அனுமதியுடன் ஏற்பாடு செய்து தருமாறு அமைச்சரைச் சந்தித்த, ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் பேச்சு வார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஸ்ர்ரப், அலிசப்ரி ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பில் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஜி.எம் ஹிஸாம் உட்பட அல்ஹாஜ் எம்.ஆர்.எம்.பாரூக், அல்ஹாஜ் எம்.ஓ.எப்.ஜெஸீம், அல்ஹாஜ் எச்.எம்.அம்ஜாடீன் மற்றும் அல்ஹாஜ் எம்.எப்.என்.எம்.உஸாமா ஆகியோர் கலந்து கொண்டனர்.