பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மாபெரும் பேரணி ஆரம்பம்

-வாழைச்சேனை நிருபர்-

இன விடுதலை வேண்டி, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் ஆரம்பமாகியது.

இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்று ஆரம்பிக்கப்படும் இப்பேரணியானது, பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு திருக்கோவில், அக்கரைப்பற்று, காரை தீவு, கல்முனை, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி வீதி வழியூடாக கல்லடி பாலத்தினை சென்றடையும்.

அதனைத் தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து செங்கலடி, வாழைச்சேனை, வாகரை வழி ஊடாக திருகோணமலை சிவன் கோவில் முன்றலினை சென்றடையும்.

17.5.2022 காலை திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, நிலாவெளி ஊடாக தென்னைமரவாடியை சென்றடைந்து, வவுனியா நெடுங்கேணி வீதி வழியாக முல்லைத் தீவைச் சென்றடையும்.

தொடர்ந்து, 18.5.2022 அன்று வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலில் சென்றடையவுள்ளது.

“முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து, அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, கடந்த 12.5.2022 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இப் பேரணியானது மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.