
சம்பூர் கடலில் நீராடிய 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
-மூதூர் நிருபர்-
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோகமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.அப்லல் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் இன்று மாலை, சம்பூர் வெளிச்சவீட்டு கடல் பகுதியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
இளைஞன் காணாமல் போனதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
