நேபாளத்தில் புதிய பிரதமர் பதவியேற்ற பின் இடம்பெறும் அதிரடி கைதுகள்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ,மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு காரணமான ஜென்-Z போராட்டங்களின் போது, பல உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்மாண்டு நகருக்கு அருகில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து நேபாள அதிகாரிகளாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன