டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தாக்கிய ட்ரோன்! (Video)

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை, டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில், ட்ரோன் ஒன்று விழுந்து தாக்குதல் நடத்தியதாக, அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அனைத்து விமானங்களும் ரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவுகளின்படி, துபாய் விமான நிலையத்திற்கு மேலாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலக்குகள் மீது தினசரி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், சர்வதேச போக்குவரத்தில் உலகின் பரபரப்பான விமான நிலையமான டுபாயின் பிரதான விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

இது குறித்து டுபாய் ஊடகப் பிரிவு (Dubai Media Office), எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் இடைமறித்து அழிக்கப்பட்ட சிதைவுகள் வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவம்” என விவரித்துள்ளதுடன், அதே பதிவில் விமான நிலையம் குறித்து பரவி வரும் ஏனைய செய்திகளை மறுத்தும் உள்ளது.