ரஷ்யா-உக்ரேன் யுத்தத்தில் உயிரிழந்த தென் ஆசியர்களில் அதிகமானோர் இலங்கையர்!

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரேன் போரில் உயிரிழந்த தென் ஆசியர்களில் அதிகமானோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த எண்ணிக்கை 275 ஆக இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்த வெளிநாட்டுப் போராளிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த வெளிநாட்டு குடிமக்கள் இலங்கையர்கள் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜித்த ஹேரத், இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, பாராளுமன்றத்தில் உரையாற்றி, ரஷ்ய போர்க்களத்தில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பின்னர் இந்த விவகாரம் குறித்து ரஷ்யா அல்லது இலங்கை அரசுகளால் எந்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு தகவலும் வெளியிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும், அதற்கும் மேலான எண்ணிக்கையில் இலங்கையர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அப்போதே சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருந்தன.

சவுத்ஏஷியன் இதழுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையர்களுக்குப் பிறகு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த தென் ஆசிய நாடு நேபாளம் ஆகும். ரஷ்ய இராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி, உக்ரேன் பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பங்களாதேஷ், இந்தியா, பகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்தில் இணைந்த மொத்தம் 455 பேர் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களின் முழுப் பெயர்கள், அவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த திகதி உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட முழுமையான பட்டியல், ஆய்வாளர்களிடம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உக்ரேன் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 24,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளனர். இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உக்ரைன் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. இதனால், போரில் இணைந்தோ அல்லது உயிரிழந்தோ உள்ள பலர் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

அதனால், போரில் இணைந்தும் உயிரிழந்தும் உள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட மொத்த எண்ணிக்கை இவற்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், உக்ரேன் இராணுவத்தில் இணைந்திருந்த நான்கு இலங்கையர்கள் போரில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இன்னும் ஐந்து இலங்கையர்கள் உக்ரேன் இராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போராடியபோது கைது செய்யப்பட்ட எட்டு இலங்கையர்கள் தற்போது உக்ரேன் அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Revealed: At least 455 Southasians killed fighting for Russia in Ukraine war, Ukraine says