டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று புதன்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவின் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் மிட்செல் சான்ட்னர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார்.

இதன்படி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியைத் தழுவாத ஒரே அணியாகத் தென்னாபிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 இல் முதலிடத்தைப் பிடித்த அவர்கள், பலமான மனநிலையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.

மறுபுறம், நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

முன்னதாகக் குழு நிலை ஆட்டத்தில் தென்னாபிரிக்காவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 8 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறும். ஒருவேளை இன்றைய தினம் மழையால் போட்டி தடைப்பட்டால், நாளை வியாழக்கிழமை அதற்கான மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.