பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகரால் குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் வெளிவாரியான விசாரணையை நடத்துவதற்கு 2025.07.25 அன்று பாராளுமன்ற பதவிநிலை ஆலோசனைக் குழு தீர்மானித்திருந்தது.
அந்தத் தீர்மானத்திற்கு அமைய, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அலகப்பெருமவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை 2025.11.24 அன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2026.02.19 அன்று நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய, குறித்த அறிக்கை தற்போது சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காக அந்த அறிக்கையின் பிரதியொன்று பாராளுமன்ற நூலகத்திலும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
