யாழில் காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை : மூவர் தலைமறைவு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை வீதியில் வசிக்கும் செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பாதை தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேற்படி நபர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், என பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் அடையாளம் கொண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.