மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு!

மன்னார் பாத்திமா புரம் பகுதியில்,  வீதி ஒன்றை அமைக்கும் போது எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும்,  மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாகி அடிதடியில் முடிந்த நிலையில் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் நகர சபைக்கு சொந்தமான எமில் நகர் எல்லையில் உள்ள, பாத்திமா புரத்தில், வீதிகளில் கிரவல் பரப்பும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் பகுதி வீதியையும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

சம்பந்தப்பட்ட நபர் தொடர்ச்சியாக வீதியை அமைத்து தர கோரி பலமுறை நகரசபை தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை வீதியை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த மன்னார் நகரசபை தலைவரிடம், நேரடியாக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் எங்கள் பகுதி வீதியை அமைக்காது,  தனிப்பட்ட நபர் ஒருவருக்காக இந்த வீதியை அமைக்க முன்னிற்பது சரியா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், குறித்த நபரை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு நகரசபை தலைவர் தெரிவிக்க, அவர் வெளியேற மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நகரசபை தலைவர் குறித்த நபரை தள்ளி விட்டு, அவர் மீது தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில், பரஸ்பரம் கற்களாலும் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக அளவு தாக்குதலுக்கு உள்ளான எமில் நகரை சேர்ந்த நபர், காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கற்கலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கே இருந்த நகர சபை பெண் உறுப்பினர் மீது கற்கள் எறியப்பட்ட நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பெண் உறுப்பினரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.