வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு
-யாழ் நிருபர்-
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஆண்களுக்கான வீதி ஓட்ட நிகழ்வானது, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, மாவடி சந்தி, மூளாய் சந்தி, சுழிபுரம் சந்தி, சித்தங்கேணி சந்தி ஊடாக மீண்டும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது.
அதேபோல, பெண்களுக்கான வீதியோட்ட நிகழ்வானது, சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, சித்தங்கேணி சந்தி ஊடாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது.
அந்தவகையில், ஆண்கள் அணியில் முதலியார் குமாரசுவாமி இல்லத்தை சேர்ந்த ஈ.தர்சிகன் முதலாம் இடத்தையும், பெண்கள் அணியில் சபாரட்ணசிங்கி இல்லத்தை சேர்ந்த கே.கேசவி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, வெற்றியீட்டிய வீர – வீராங்கனைகளுக்கான மற்றும் போட்டியை முழுமையாக நிறைவு செய்த மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
கல்லூரியின் முதல்வர் சி.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ். உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர் ப.தர்மகுமாரன் கலந்து சிறப்பித்ததுடன், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
