கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள் அத்துமீறல்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது, இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி மீனவர்கள் கட்டைக்காட்டு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்

இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான கடல் வளத்தை அவர்கள் சட்டவிரோத முறையில் கண்முன் அழித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.

வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி மீனவர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.