நிவாரண நிதி, வங்கிக் கடன்களைப் பெறும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார் .
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போது மத்திய வங்கி ஆளுநர் இதனைக் குறிப்பிட்டார்.
பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது.
பிரஜைகள் என்ற ரீதியில் தமக்குத் தேவையான அளவை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும். இதன் மூலம், தேவையுள்ள ஏனைய தரப்பினருக்கு முறையான முகாமைத்துவத்தின் கீழ் அந்த நிதியை வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிட்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெற்றுக்கொள்ளும் நிவாரண நிதியை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போது, அத்துறையினருக்கு நிவாரணக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்காத தரப்பினர் என இரு சாராரும் தேவைக்கு அதிகமாக கடன்களைப் பெற்றனர். பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வணிகங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்தாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, வழங்கப்படும் நிவாரணக் கடன்களைக் கூட தமது வணிகத்துக்கு தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கலாம் எனவும் மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் பணத்தை முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
