மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள் மற்றும் நாயை திருடிய பிரபல திருடன் போதைப்பொருளுடன் கைது!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் இருந்து, கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து, திருடப்பட்ட கோழிகள் மற்றும் நாயை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில், தனது பண்ணையில் இருந்து சம்பவதினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, 30 கோழிகள் மற்றும் வளர்ப்பு நாய் ஒன்று திருட்டு போயுள்ளதாக, வைத்தியர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கருவப்பங்கேணியைச் சேர்ந்த இளைஞனான பிரபல திருடனை, நேற்று செவ்வாய்க்கிழமை, 2700 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

வைத்தியரின் பண்ணையில் திருடப்பட்ட 30 கோழிகளில் சிலவையும், நாயும், கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன், நீண்டகாலமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், பல முறை திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர், எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், அவரை 3 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய, நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.