மட்டக்களப்பு ஊறணி பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேரை நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி பண்டார தெரிவித்தார்
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 26 லீற்றர் கோடா மற்றும் பெருமளவிலான ஜஸ் போதை பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ்பரிசேதகர் சஞ்சீவ மற்றும் போதை மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பெர்னான்டே தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரு குழுவாக பிரிந்து ஊறணிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் 26 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை மீட்டனர்.
இதேவேளை புதிய எல்லை வீதியில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் இரு போதை பொருள் வியாபாரிகளை சுற்றிவளைத்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 8730 மில்லிக்கிராம் மற்றும் 7000 மில்லிகிராம் ஜஸ் போதை பொருட்களை மீட்டனர்
கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரிகளான இருவரையும்; மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.