-யாழ் நிருபர்-
குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு, பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெசிந்தன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில், அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார்.
அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில், குடும்பஸ்தர் மயக்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
மரண விசாரணைகளின்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறித்த குடும்பஸ்தர் நாய்கடிக்கு இலக்காகியுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார், சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நாய், மேலும் சிலருக்கு கடித்ததாக தெரியவந்துள்ள நிலையில், அவர்களை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.