பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஏப்ரல் மாதம் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும் நீதியான விசாரணை நடத்த கோரியும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரி ஐனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து கையெழுத்து பெறும் நிகழ்வு பேத்தாழை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கையானது மாவட்டத்தில் பல இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கோறளைப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ் தெரிவித்தார்.