அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில், சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 09 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 05 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு சார்பில் 03 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சி சார்பில் 01 உறுப்பினரும், தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 01 உறுப்பினரும், என 23 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது, உள்ளுராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.
இருவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து, பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது, பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.
இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும், பகிரங்க வாக்கெடுப்பின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய தவிசாளராக போட்டியிட்ட ஐ.எல்.எம். மாஹிர் என்பவர் 14 வாக்குளை பெற்று சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.
எதிராக போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான சாப்தீன் நளீம் என்பவர் 07 வாக்குளை பெற்ற நிலையில், 07 மேலதிக வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது, 3 பேர் புதிய உப தவிசாளர் தெரிவில் உள்வாங்கப்பட்ட நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் வெள்ளையன் வினோகாந் என்பருக்கு 12 வாக்குகளும், சுயேட்சைக்குழு உறுப்பினரான சுலைமாலெப்பை அப்துல் நஸார் என்பவருக்கு 07 வாக்ககளும், ஆனந்தம் சதானந்தம் என்பவருக்கு 2 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் வெள்ளையன் வினோகாந் 05 மேலதிக வாக்குகளை பெற்று உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.