மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு
-மன்னார் நிருபர்-
மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இன்று வியாழன் காலை 10. மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் இன்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவருகிறது.குறித்த கடற்படை சிப்பாய் மன்னார் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.