நுவரெலியாவில் மற்றுமொரு பேருந்து விபத்து

நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த நான்கு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போது ​​பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து வீதியின் இடது புறத்தில் உள்ள மலையில் மோதி நிறுத்தப்பட்டது.

பேருந்து விபத்துக்குள்ளான பகுதி செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த வீதியில் இருப்பதாகவும், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 60 பயணிகள் பயணித்துள்ளனர்.

விபத்து குறித்து வலப்பனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.