மாத்தளை மாவட்டம் களுதாவைள பகுதியில் வசித்து வரும் தினேஸ்ராஜ் மற்றும் ஷெரின் தம்பதிகளின் 8 வயது மகனான நிஷ்விக் மாத்தளையில் இயங்கி வரும் எஸ்.ஐ.பி அபாகஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கற்று வருகிறார்.
தொடர் பயிற்சியின் காரணமாக கணக்கிடுவதில் இவருக்கிருந்த வேகத்தினை கவனித்த இவரது ஆசிரியர்களான சங்கரப்பிரியா மற்றும் சுரேந்திரன் போன்றோர் இவரது திறமையை உலக சாதனைமாகப் பதிவு செய்ய முடிவெடுத்தனர்.
இதற்கான நிகழ்வு கொழும்பு ஜயா மாவத்தையில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது மாணவன் நிஷ்விக் மூன்று மற்றும் இரண்டு எண்களை ஒரு எண்ணினால் பெருக்கியும் மூன்று எண்களை ஒரு எண்ணால் வகுத்தும் 3 நிமிடங்களில் 180 கணக்குகளுக்கு சரியான விடையளித்தார்.
இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா மற்றும் பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷனின் இயக்குநர் க்ளோரன்ஸ் சாமுவேல் போன்றோர் உலக சாதனையாக உறுதி செய்து சாதனை மாணவனுக்கு சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த இளம் கணித மேதைக்கு எஸ்.ஐ.பி. அபாகஸ் பயிற்சி மையத்தின் நிர்வாகத் தலைவர்கள் பாராட்டினார்கள். எஸ்.ஐ.பி. அபகஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்தவர்களும் சோழன் உலக சாதனை படைத்த மாணவனை வாழ்த்திப் பாராட்டினார்கள்.