-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோதமாக, மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
ஆழியவளை பகுதியில், மணல் சட்டவிரோதமாக அகழப்படுவதாக பொலிஸாருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், தெரியப்படுத்திய போதும், அவர்களால் குறித்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு நேரம் காவல்களை அமைத்து, ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, டிப்பர்கள் மூலம் பாரிய மணல் கொள்ளையை சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்திய அப்பிரதேச மக்கள், பாதைகளை அழித்து, வீதிக்கு அருகில் பெருமளவான மணல் வளத்தை சூறையாடி செல்வதால், தற்பொழுது பாதைகளிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.
மணல் மேடுகளை அழிப்பதால், கடல் நீர் குடி மனைகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, தமது கிராமத்தை பாதுகாத்து தருமாறும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.