
-செ.திவாகரன்-
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.
36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
இவர் அக்ரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து நிலையில், இடமாற்றம் காரணமாக கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தாதியாக சேவையாற்றிய நிலையில் கடந்த ஆறு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக, அவரது கணவரால் ஆறு மாதங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
இவர்களது விசாரணைகளின் மூலம், கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைக் கைதுசெய்ததுடன், மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று புதைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும் உயிரிழந்த பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் பன்வில பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர் தெரிவித்ததையடுத்து குறித்த ஆபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி வலப்பனை நீதவான் சியபத் விக்கிரமசிங்க முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மந்தாரநுவர பிரதேசத்தை சேர்ந்த மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்ய உள்ளதாகவும், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
