7 மாதங்களாக மின்சாரம் இல்லாத பாடசாலை: கேள்வி எழுப்பியபோது தொலைபேசியை துண்டித்த கல்வி பணிப்பாளர்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார இணப்பு மீள வழங்கப்படாத நிலை காணப்படுகிறது .

தீவக வலயத்திற்கு உட்பட்ட ஊர்காவற்துறை பகுதிப் பாடசாலை ஒன்றிலே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்ட பாடசாலையின் ஒருபகுதியில் கோட்டக் கல்வி அலுவலகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

குறித்த பாடசாலையின் மின்சார கட்டணமும் கோட்டக் கல்விக்கு பயன்படுத்தும் பட்டியல் நிலுவையும் வலயக் கல்விப் பணிமனைக்கு அனுப்பப்பட்ட போதிலும் உரிய காலப் பகுதியில் நிலுவை செலுத்தப்படாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் இணைப்பை செயல்படுத்துவதற்கு சுமார் 3500 ரூபா தண்ட பணம் கட்டப்பட வேண்டும் .

தண்டப் பணத்தை காட்டினால் தண்டப்பணம் கட்டியமை தொடர்பில் கணக்காய்வு விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வலயக் கல்வி அலுவலகம் பணத்தை கட்ட பின்னடித்து வருவதாக அறிய முடிகிறது.

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைகள் ஒரு வாரமாக ஆரம்பமாகிய இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 7 மாதங்களாக குறித்த பாடசாலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த பாடசாலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசொளகரிகங்களை எதிர் நோக்கிவருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் சி. ஞானசுந்தரனை தொடர்பு கொண்ட போது குறித்த விடயங்கள் அனைத்தையும் செவிமடுத்த பின் தொலைபேசியை நிறுத்திவிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பாடசாலைக்கு மின்சாரம் துண்டிப்பு இடம்பெற்றமையை உறுதி செய்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்