ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகளுக்கு மூன்றரை கோடி நிதி ஒதுக்கீடு

ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகள் முடக்கப்பட்டதனால் வர்த்தகர்களும் பொதுமக்களும் நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

முன்னுரிமை அடிப்படையில் ஏறாவூர் பொதுச்சந்தையை துரிதமாக அபிவிருத்தி செய்து பொதுமக்களின் பாவனைக்கு வழங்கிட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர்   செந்தில் தொண்டமானிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளையும் சாத்திய வளங்களையும் ஆராயுமாறு அவர் அதிகாரிகளுக்கு வழங்கிய பணிப்புரையை அடுத்து ஆளுநரின் விசேட பரிந்துரையின் மூலமாக சுமார் 35.50 மில்லியன் ரூபாய்கள் ஆளுநரால் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கமைவாக ஆளுநரின் விசேட ஏற்பாட்டின் மூலமாக அரசினால் செயற்படுத்தப்படும் சிறப்பு வேலைத்திட்டங்களில் ஒன்றான உள்ளக அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகித அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் ஊடாக பகிரப்படும் நிதியில் 35.50 மில்லியன்களை ஏறாவூர் நகர சபைக்கு ஒதுக்கீடு செய்து அந்த நிதி பொதுச்சந்தை நிருமாண பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

அதன்பிரகாரம் மதிப்பீடு மற்றும் இலங்கை கட்டட தினைக்களத்தின் ஒப்புதல் பெறப்பட்டு குறித்த பணியினை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் கேள்வி பத்திரமும் கோரப்பட்டு நாளை மறுதினம் அது நிறைவடைய உள்ளது.

சுமார் மூன்றரை கோடி ரூபாய் நிதியின் மூலம் ஏறாவூர் பொதுச்சந்தையின் எஞ்சிய வேலைகளை முன்னெடுத்து மக்களின் பாவனைக்கு வழங்குவதற்காக தனது முழுமையான பங்களிப்பினை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அளித்த உறுதிக்கு அமைவாக மிக விரைவாக குறித்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்