
திருகோணமலையில் 8 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை
சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை, கந்தளாய் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிராயுதபாணியான 8 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அநுராதபுரம் வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
1998 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் இடம்பெற்ற இந்த பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபர் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
பாரதிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் ஆயுதமேந்திய குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அப்போது பொலிஸ் குழுவனர் கொலை செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடியிருந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டனர்.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பொலிஸ் பரிசோதகர் ரணராஜ பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் G.L.சோமரத்ன மற்றும் சார்ஜன்ட்களான சந்திரரத்ன பண்டார, நிஹால் பிரேமதிலக மற்றும் சோமரத்ன பண்டார மெதிவெல ஆகியோர் அடங்குவர்.
முதலில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார், பின்னர் அந்த பகுதியில் நடந்த யுத்த சூழல் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பு கருதி வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதேவேளை, உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய போது பாரதிபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாரடைப்பு காரணமாக நீதிமன்றில் சுருண்டு விழுந்தார். பின்னர், சிறைச்சாலை மற்றும் நீதிமன்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரானதுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக சட்டத்தரணி சாந்தனி ஹடங்கல உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
