மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மட்ட விளையாட்டு விழா

-வெல்லாவெளி நிருபர்-

 

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வானது நேற்றைய தினம் புதன் கிழமை பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு. உதயகுமார் சிவராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற மைதான மற்றும் குழுநிலை போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வுகளும் , வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் வருட பிரதேச விளையாட்டு நிகழ்வுகளில் மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்கள் பிரிவில் சம்பியனாக செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகம் தெரிவானதுடன் இரண்டாமிடத்தை களுதாவளை கெனடி விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.

இவ் விளையாட்டு நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலப்பு அஞ்சல் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் ஆண் பெண்கள் இணைந்த 7 அணிகள் பங்கேற்றிருந்தது. அத்தோடு உத்தியோகத்தர்களுக்கான சங்கீத கதிரை நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர்  சா. அறிவழகன், செட்டிபாளைய கிராம ஆலய மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்