இரட்டை முகம் காட்டும் சிறீதரனின் குரோத அரசியலே காரணம்

-யாழ் நிருபர்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விசுவாசியான பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் உறவினரே டோக்கியோ நிறுவனத்திற்கு பொன்னவெளியில் உள்ள தனது காணியை அதிக விலைக்கு விற்பனை செய்தார் என கிராஞ்சி கமக்கார அமைப்பின் செயலாளர் ஜெ. நங்களலேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொன்னாவெளிப் பிரதேசம் மக்கள் யாரும் வசிக்க முடியாத வயல் நிலங்களோ உவரான பிரதேசமாக காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தில் சுண்ணாம்பு கல் அகழ்வுக்காக டோக்கியோ நிறுவனம் தமது தற்காலிக கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு காணிகளைத் தேடினார்கள்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விசுவாசியான பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளரின் உறவினரின் சுமார் ஆறு ஏக்கர் காணியை அதிக விலைக்கு குறித்த நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்கள்.

அவர்கள் ஏன் அன்று அவ்வாறு செய்தார்கள். இந்தப் பிரதேசத்தில் என்ன திட்டம் வரப்போகிறது என்பதும் அவர்களுக்கு தெரியும். தெரிந்தே காணியை அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள்.

இந்த விடயங்கள் சிறிதரன் எம்பிக்கு தெரியாதா? அவர்களுக்கே தெரியும் இந்தப் பிரதேசம் மக்கள் வாழ முடியாது என.

இன்று பொன்னாவெளியைப் பற்றிப் பேசுபவர்கள் அந்தப் பிரதேசத்தை உவர் நீரில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு அணைய கூட கட்டுவதற்கு நிதி ஒதுக்க முடியாதவர்களாக காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்ட நிலையில் பொன்னாவெளியில் சுன்னக்கல் தொடர்பான ஆய்வு மேற்கோள்வது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது சிறிதரன் எம்பி மௌனமாக இருந்தார்.

அங்கு மௌனமாக இருந்த தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொன்னா வெளியில் வாசிக்காத தனது ஆதரவாளர்களை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொன்னாவளியில் 2000 தொடக்கம் 3000 வரையான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்போம் என வாக்குறுதி அளித்தமை இந்த தொழிற்சாலையை நிறுவுவதற்கான முன் ஆயத்தமே.

நல்லாட்சி அரசாங்கத்தில் பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு ஆய்வு தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்றபோது மௌனமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது அரசியல் ரீதியான காரணங்களுக்காக திட்டத்தை குழப்பம் முற்படுகின்றனர்.

பொன்னாவெளியில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை குழப்புவதற்கு அந்தப் பிரதேசங்களை சம்பந்தப்படாத வெளியாக்களை கொழும்பிலிருந்தும் வேறு பகுதிகளிலும் இருந்தும் அழைத்துவந்தனர்.

தமிழரசு கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் பொன்னாவெளியில் தொழிற்சாலை ஆரம்பித்து வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றால் ஏன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதைச் செய்யக்கூடாது.

இங்கு பிரச்சனை டோக்கியோ நிறுவனத்தின் சுண்ணாம்பு அகழ்வு அல்ல, டக்ளஸ் தேவானந்தா செய்வதை தடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கிளிநொச்சி வாக்குகள் அவருக்கு சென்று விடும் என்ற குரோத அரசியலே காரணம்.

பொன்னாவெளியைப் பற்றி கவலைப்படும் சிறிதரன் எம்.பியிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். தையிட்டி விகாரைப் போராட்டத்திற்கு செல்கிறீர்கள் வெடுக்கு நாறி குருந்தூர் மலைப் போராட்டத்திற்கு செல்கிறீர்கள். ஏன் உங்களால் பொன்னாவெளிப் போராட்டங்களுக்கு வர முடியாதுள்ளது.

தென்னிலங்கைக்கு ஒரு முகத்தையும் கிளிநொச்சியில் ஒரு முகத்தையும் காட்டிக் கொள்ளும் சிறிதரன் போன்றோரின் அரசியலை மக்கள் நம்பி ஏமாந்து விடாமல் தமக்கான அபிவிருத்திகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்