இலங்கை அகதிகளை கொச்சைப்படுத்திய மீனவ சங்க தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

-மன்னார் நிருபர்-

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த தற்போது எமக்கு வழங்கியுள்ள உதவிகளை திருப்பி கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் வெளியிட்ட கருத்து தொடர்பாக குறித்த ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்படுகின்றது.இந்திய மீனவர்கள் விடயத்தில் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிற விடயம் எமது இறைமையை மீறாதீர்கள்,எமது எல்லையை தாண்டாதீர்கள் என்று.நாங்கள் தமிழக மீனவர்களை எந்த விதத்திலும் அவர்களின் எந்தச் செயல்பாட்டிலும் நாங்கள் உள் நுழைவதில்லை.

அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரையோகங்களை கூட நாங்கள் கவனமாக கையாள்கிறோம்.ஏன் எனில் இந்தியா எமக்கு தேவையான ஒரு நாடு.இந்தியாவை நம்பி இலங்கை மக்கள் இருக்கிறார்கள்.பல்வேறு விடையங்களில் இந்தியாவின் அனுசரனை தமிழ் மக்களுக்கு உள்ளது.இவ்வாறு பல்வேறு சகிப்புத் தன்மையுடன் இந்திய மீனவர்களின் விடயத்தை நாங்கள் கையாண்டு வருகிறோம்.

இருந்தாலும் தமிழக மீனவர்கள் எங்களை ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற தொனிப்பொருளில் தான் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் தெரிவித்த கருத்து அமைந்துள்ளது.

அதே போன்று தான் சட்ட விரோதமான மீன்பிடியில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்களின் நிலைப்பாடும் அமைந்துள்ளது? என தோன்றுகின்றது.

அவரின் உரைக்கு நாங்கள் ஒரு பதிலை வழங்க வேண்டிய நிலை உள்ளது.வட பகுதி கடல் பரப்புக்குள் 30 வருடங்களுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை காணப்படுகின்றன.

திடீர் திடீர் என இலங்கை கடற்படை ஒரு சில படகுகளையும் மீனவர்களையும் கைது செய்கின்றனர்.

மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்,சில நேரங்களில் படகு அரச உடமையாக்க படுகிறது.ஆனால் எந்த மீனவரையும் நீண்ட நாட்களாக சிறையில் வைக்காது விடுவித்து வந்தனர். நாங்களும் அதைத்தான் வலியுறுத்துகின்றோம்.

மீனவர்களை விடுவியுங்கள் என்பதே எமது பிரதான கோரிக்கையாக அமைகின்றது.ஆனால் வருகின்ற மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மீன் பிடிச் சட்ட வரைபுக்குள் அவர்கள் கையாளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் தான் ஒரு தடவைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை அத்துமீறி வருகை தந்ததன் காரணத்தினாலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு சட்டச் செயல்பாடு.இதில் மீனவர்களாகிய எங்களினால் கூட தலையிட முடியாது.

அரசாங்கத்தினாலும் இதில் தலையிட முடியாது.இலங்கை நாட்டில் உள்ள சட்டம் இலங்கை மக்களுக்கும் பொதுவானது.இங்கு வருகின்ற ஏனைய நாட்டவர்களுக்கும் பொதுவானது. எனவே சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஒரு நடைமுறையை விமர்சிப்பதும் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதும் கச்சை தீவை புறக்கணிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

இராமேஸ்வர விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை அகதிகள் தொடர்பாகவும் ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.தங்களது வரிப்பணத்தில் அந்த மக்களுக்கு சோறு போடுவதாக தெரிவித்தள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த அகதி முகாமை இந்தியா பராமரித்து வருகிறது. அதனை கூட புரிந்து கொள்ளாமல் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் இடம் பெயர்ந்து தமிழக முகாம்களில் உள்ள மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்தை வெளியிட்டுள்ளார்.அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

இக் கருத்து தொடர்பாக அரசியல் பிரதிநிதிகள் இந்திய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். நான் உடனடியாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

எனவே ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் மன்னிப்பு கோர தவறினால் இந்தியா செய்த தற்போது எமக்கு வழங்கியுள்ள உதவிகளை திருப்பி கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எமது மீனவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.கச்சை தீவை புறக்கனித்த போதே அவர்களின் நிலைப்பாடு என்ன என்று எமக்கு தெரிகிறது.என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்