
பட்டபகலில் இளம்பெண்ணை வெட்டி கொன்ற ஒருதலை காதலன்
தமிழ்நாடு-திருநெல்வேலி மாவட்டம் டவுண் நெல்லையப்பர் கோவில் அருகே விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்தில் இளம் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் டவுண் நெல்லையப்பர் கோவிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளும் எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படும் பகுதிகளாகும்.
இந்நிலையில் திருப்பணி கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தியா (வயது 18) என்ற இளம் பெண் நெல்லையப்பர் கோவில் அருகே கீழரத வீதியில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மேல்படிப்பை தவிர்த்துவிட்டு சந்தியா பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தியாவை கண்ணன் என்ற இளைஞர் ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்ததாக அக்கடையில் வேலை செய்யும் பெண்கள் தெரிவித்துள்ளனர். கண்ணனின் காதலை சந்தியா தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.
ஆனால் அதனை பொருட்படுத்ததாத கண்ணன் தொடர்ந்து சந்தியாவுக்கு காதல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தியா வழக்கம் போல் கடைக்கு பணிக்கு வந்துள்ளார். பின்னர் கடைக்கு தேவையான பொருட்களை சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கண்ணன் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சந்தியா கடைக்குள் சென்ற நிலையில் திடீரென கடைக்குள் புகுந்த கண்ணன் அவரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த தாக்குதலில் குறித்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளம் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
