வடக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக முடக்கம்

-மன்னார் நிருபர்-

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம் பெறும் அத்துமீறல்களை நிறுத்த கோரியும் இன்று செவ்வாய்கிழமை மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரம் முல்லைத்தீவில் இடம் பெற்று வரும் போராட்டத்திலும் கலந்து கொண்டு நீதிபதி சரவணராஜவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எந்த ஒரு நீதி மன்றத்திலும் ஆஜராகவில்லை என்பதுடன் வழக்குகளுக்காக சமூகளித்த பொது மக்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர்.

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று செவ்வாய்கிழமை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை. வழக்குகள் தவணையிடப்பட்டன.

 

 

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்று செவ்வாய்கிழமை  முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று திங்கட்கிழமை ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.