சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரண் அமைக்கப்மடவில்லை என குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்-

வடமராட்சி மருதங்கேணியில் நீண்ட காலமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை குறித்த பகுதியில் பொலிஸ்காவலரண் அமைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போதே மருதங்கேணி பிரதேச செயலாளர் இதனை தெரிவித்தார்.

நீண்ட காலமாக குறித்த பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை, நாகர்கோயில், மணற்காடு பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன் குடத்தனை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த கோரிக்கைக்கு அமைவாக பொலிஸார் செயற்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில்,

இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. கூட்டங்களில் மாத்திரம் இந்த விடயம் பேசப்படுகிறதே தவிர எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்பட  இல்லை என விசனம் தெரிவித்தனர்.